ETV Bharat / state

ஆதார் விவரங்களைக் கொண்டு பி.எப் பணம் திருட்டு: இ-சேவை மைய உரிமையாளர் கைது!

author img

By

Published : Sep 3, 2021, 7:40 AM IST

சென்னை: இரண்டு நபர்களின் ஆதார் விவரங்களை மாற்றி பி.எப் பணம் திருடிய இ-சேவை மைய உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளி கிருஷ்ணன் (35), நாராயணன் (37). சென்னையில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வரும் இவர்கள், கரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவதற்காக இ-சேவை மையம் நடத்தி வரும் விக்னேஷ் என்பவரிடம் ஆதார் கார்டுகளைக் கொடுத்தனர்.

ஆதார் விவரங்களைக் கொண்டு பி எஃப் பணம் திருட்டு!

இதனைப் பயன்படுத்தி விக்னேஷ் இருவரின் பி.எப் கணக்கு விவரங்களையும் மாற்றியமைத்து, தனது வங்கிக் கணக்கில் விவரங்களை பதிவேற்றிக் கொண்டார். பின்னர் கடந்த ஜூன் 18ஆம் தேதி முரளி கிருஷ்ணனின் பி.எப் கணக்கில் இருந்து 1.04 லட்சம் ரூபாய், நாராயணன் கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.

தங்களது பணம் எடுத்த விவகாரம் தெரிந்த இவர்கள், இதுகுறித்து விக்னேஷிடம் கேட்ட நிலையில், விக்னேஷ் பணத்தை மீண்டும் இருவரது பி.எப் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அலட்சியம் காட்டிய காவல் துறையினர்...

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் மண்டல பி.எப் அலுவலக அலுவலர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் தாம்பரம் காவல் துறையினர் இதுகுறித்த புகார் மனுவை பெற்றதற்கான சான்றிதழை மட்டுமே வழங்கிவிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர்.

தொடர்ந்து பி.எப் அலுவலக அலுவலர்கள், இச்சம்பவம் குறித்து தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து ஜூலை 7 ஆம் தேதி விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜூலை 16 ஆம் தேதி தாம்பரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நேற்று (செப் 2) தலைமறைவாக இருந்த விக்னேஷை கைது செய்தனர். உரிய விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.